மனிதகுல வரலாற்றில் அணுசக்தி அல்லாத வெடிப்பால் ஏற்பட்ட பாரிய சேதமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடந்த பாரிய வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக வல்லுநா்கள் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்குப் பொறுப்பானவா்கள் எனக் குற்றஞ்சாட்டப்படும் துறைமுக நிர்வாக அதிகாரிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பேரழிவுகளை அடுத்து லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக லெபனான் ஜனாதிபதி மைக்கேல் ஆன் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிப்புக்கு காரணமான வேதிப் பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்றுமாறு எங்களது துறை சார்பில் முன்னரே கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இதற்கான காரணத்தை கண்டறிவதை வல்லுநர்கள் வசம் விட்டுவிடுகிறோம் என இது குறித்து லெபனான் சுங்கத்துறை தலைவர் பத்ரி தாஹிர் கருத்து வெளியிட்டுள்ளார்.
விவசாயத்துக்குத் தேவையான உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
இதேவேளை, பாரிய வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை அடுத்து நேற்று லெபனான் அமைச்சரவையின் அவசர கூட்டத்தைக் கூட்டிப் பேசிய ஜனாதிபதி மைக்கேல் ஆன், பெய்ரூட் எதிர்கொண்ட கோர சம்பவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டில் பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.
புகை, இடிபாடுகள் என அனைத்து இடர்பாடுகளையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் விரைந்து சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பில் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டு சக்தியில் பத்தில் ஒரு பங்கு சக்தி வெளிப்பட்டிருக்கலாம் என பிரிட்டனின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிப்புகளில் இதுவும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.