இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக, வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியின் வாக்கெண்ணும் பணிகள் இன்று (06) வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் பிரதான வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
குறித்த வாக்கெண்ணும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கெண்ணல் நிலையங்களில் 350 அரச உத்தியோகத்தர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட பெறுபேற்று அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் சூழலில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதுடன் அவ்வப்போது ஒலி பெருக்கி ஊடாக அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு