நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளதுடன், நாடாளுமன்றில் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளத் தவறியது.
அத்துடன் கடந்த 2015 பொதுத் தோ்தலில் 5 இலட்சம் விருப்பு வாக்குகளுடன் கொழும்பு மாவட்டத்தில் அமோக வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க தனது 42 வருட கால அரசியல் வரலாற்றில் முதல் தடவையாகத் தோல்வியைத் தழுவினார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் தேசிய மக்கள் சக்தி 67,600 வாக்குகளையும் பெற்றுக்கொண்ட அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சி 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றது.
இந்நிலையில் தேர்தல் சட்டத்தையும் மீறி விருப்பு வாக்குகளை எண்ணுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் முயற்சிக்கப்பட்டதாக சஜித் தரப்பினரால் நேற்றிரவு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் இது தொடர்பாக நேற்று நள்ளிரவில் விசேட அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை நேற்று நள்ளிரவு வரை வெளிவந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவுகள் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பல பகுதிகளில் மொட்டு அணி வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்கவும் இம்முறை தோ்தலில் தோல்வியடைந்தார்.