மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் முன்னதாக கருத்து வெளியிட்ட சுமந்திரன்,
இனிவரும் நாட்களிலே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மீள் எழுச்சி என்பது இளைஞர்கள் கைகளிலே தங்கியுள்ளது.
தெட்டத் தெளிவாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதை மக்கள் கட்சிக்கு இடித்துரைத்திருக்கிறார்கள்.
மக்களுடைய நம்பிக்கையை எங்களிடம் சுமத்தியிருப்பதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையை நாங்கள் சிரம்மேற் கொண்டு கட்சி மீள் எழுச்சியையும் நாங்கள் நடத்துவோம்.
கட்சியை பொறுப்பேற்று நாங்கள் முன் கொண்டு செல்வோம் என்ற வாக்குறுதியையும் நான் மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, வட மாகாணம்