தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்விக்கு தமிழரசு கட்சியின் வாக்கு சரிவே காரணம் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் எழுப்பிய போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்காளி கட்சிகளின் ஆசனங்கள் அதிகரித்துள்ள நிலையில் தமிழரசு கட்சியின் ஆசனங்கள் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு சரிவிற்கு தமிழரசு கட்சியின் வாக்கு சரிவு காரணம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
ஆம். தமிழரசு கட்சிக்கே வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பு குறைந்ததாக நாம் கூற முடியாது. சில வெளிநாட்டு ஊடகங்களின் பொய் பிரச்சாரங்கள் மற்றும் உள் கட்சியில் காணப்பட்ட பிரச்சாரங்கள் காரணமாக தமிழரசு கட்சியின் வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் சரிந்துள்ளது. சிங்கள கட்சிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்காமல் தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதிலும் தமிழரசு கட்சியையும் விமர்சித்தார்கள். சில ஊடகங்களும் அதையே செய்தது. இவ்வாறான நிலையிலேயே இந்த வாக்கு சரிவு தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.
கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் சிவஞானம் சிறிதரனது விருப்பு வாக்கில் சரி பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவியபோது,
கடந்த பொது தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்கு 2 லட்சத்துக்கு மேலானது. இம்முறை ஒருலட்சத்திற்கு சற்று அதிகமானது. எனவே வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமழரசு கட்சியை இலக்கு வைத்தே பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக என்னை இலக்கு வைத்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சியில் ஒரு சுயேட்சை குழுவை சேர்ந்தவருக்கு ஆதரவாக மேடையில் ஏறி பேசியவர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அது போன்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பல முன்னெடுக்கப்பட்டது. சில வெளிநாட்டு ஊடகங்கள் இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர். சொத்துக்கள் இருப்பதாகவும், அரசுடன் தொடர்பு இருப்பது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
அதேவேளை மக்களிற்கும் என்மீதான விமர்சனங்கள் இருந்திருக்கலாம். அதேவேளை எமது கட்சியில் போட்டியிட்டவர்களும் பல்வேறு விமர்சனங்களையும் சேறு பூசும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி