நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் மகிந்த ராஜபக்சே நாளை காலை பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் முதலாவது பயணமாக இந்தியாவிற்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் குஷினகர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவ் விமானநிலையத்தில் முதலாவது சர்வதேச விமானத்தை தரையிறக்கப்படும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு கோரும் மோடியின் அழைப்பை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மகிந்த ராஜபக்சேவிடம் தெரிவத்துள்ளார்.
அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் இந்த அழைப்பை விடுத்தார்.
பிரதமர் மோடி பௌத்த மதத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் தொல்பொருள் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே இதன்போது கூறினார்.
இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள எயார் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இதன்போது தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே தெரிவித்தார்.
இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டார்.
சூரியன் உதயமாவது போன்று பிரதமரின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், பிரதமரின் ஆசீர்வாதத்துடன் முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இந்தியா, இலங்கை