லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் அங்கு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசின் அலட்சியமே இந்த அழிவுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டி அங்கு மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுள்ள மக்கள் லெபனான் அரசாங்கம் பதவி விலகக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து அலுவலகங்களை அடித்து நொருக்கி அவா்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போராட்டக்காரா்களைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸாருக்கும் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பொலிஸார் மீது ஆா்ப்பாட்டக்காரா்கள் கல்களை வீசித் தாக்கிய அதேவேளை, பொலிஸாரும் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி கூட்டங்களைக் கலைத்தனர்.
நகரின் சில பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்துள்ள நிலையில் போராட்டங்களும் தொடா்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய லெபனான் பிரதமர் ஹசன் தியாப், இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து வெளிவர முன்கூட்டியே தேர்தலை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
முன்கூட்டியே தேர்தலை நடத்தாமல் நாட்டில் நிலவும் இந்த நெருக்கடி நிலையிருந்து நம்மால் வெளியே வர முடியாது அவர் கூறினார். இதுதொடர்பாக நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள லெபனானின் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரியவருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,000 தொனகளுக்கும் அதிகமான அம்மோனியம் நைட்ரேட் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மிகப்பெரிய வெடிப்புக்கு காரணமானது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 158 என அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 4000 போ் வரை காயமடைந்துள்ளனர்.
இந்தப் பேரழிவுக்கு அரசின் அலட்சியமே காரணமென்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த வெடிப்புக்கு காரணாமான அம்மோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளுக்கு முன்பு கப்பலொன்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டும் ஏன் அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லப்படவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்த பிரச்சனைக்கு காரணமானவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.