தேசியப் பட்டியல் ஆசன பங்கீடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி உச்சமடைந்து நாளைவரை சஜித்துக்கு காலக்கெடு விதித்து மனோ-ஹக்கீம்-ரிசாட் கூட்டாக தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 47 ஆசனங்களை விகிதாசார முறையிலும் தேசியப் பட்டியல் ஊடாக 7 ஆசனங்களுமாக 54 ஆசனங்களை பெற்று இரண்டாவது பெரிய அரசியல் தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தி உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பய்காளிக் கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டில் தமது கட்சிகளுக்கும் ஆசனங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி 6 ஆசனங்களையும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 5 ஆசனங்களையும், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இம் மூன்று பங்காளிக் கட்சிகளின் 15 ஆசனங்களையும் உள்ளடக்கியே 47 ஆசனங்களை பெற்று இரண்டாவது பெரும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி உருவெடுத்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கிடைத்த தேசியப் பட்டியில் ஆசன பங்கீட்டில் தமது கட்சிகளுக்கும் உரிய இடம் தரப்பட வேண்டும். இல்லையேல் தம் சார்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனி குழுவாக செயற்பட வேண்டிவரும் என திங்கட் கிழமை வரை காலக்கெடு விதித்து, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய மூவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை ஐக்கிய மக்கள் சக்திக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை