முழுநேர களப் பணியாளனாக மக்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ள தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிரதிநிதியாக தேசிய பட்டியல் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கலையரசன் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “நடந்து முடிந்துள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரிதிநிதித்துவம் இல்லையென்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க தலைமை தீர்க்கமாக முடிவெடுத்துள்ளது.
அதற்கிணங்க, குறித்த ஆசனம் எனக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் கட்டளைக்கு அமைவாகவும் மக்களின் தேவைகளை அறிந்தும் செயற்படுவேன் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், முழுநேர களப் பணியாளனாக நின்று பணிபுரிவேன் என்றும், அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை ஒரு சவாலாக ஏற்று எங்களுடைய வடகிழக்குப் பிரதேசங்களில் எங்களுடைய கட்சியை மிகவும் கட்டமைத்து எதிர்காலத்தில் நடைபெறப்போகின்ற எந்த தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு