கொரோனா தொற்று நோயின்றி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளது நியூசிலாந்து.
தென் பசிபிக் கடலில் 50 இலட்சம் மக்கள் உள்ள நியூஸிலாந்து தீவில் தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கட்டுப்பாடுகளும் தளா்த்தப்பட்டுள்ளன.
ரக்பி, கால்ப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரை அரங்குகள், வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுள்ளன. 100 நாட்களாக கொரோனா இல்லாத நிலையை மக்கள் அங்கு கொண்டாடி வருகின்றனர்.
நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தது. அங்கு மொத்தம் 1,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர்.
தொற்று நோயை அடுத்து கடும் கட்டுப்பாடுகளை நியூசிலாந்து விதித்தது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடையும் முன்பே அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா கடுமையான நடவடிக்கை எடுத்து எல்லைகளை மூடினார். தங்கள் நாட்டு மக்களைத் தவிர பிறநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்நாட்டு மக்கள் வந்தாலும் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருந்து அதன்பின் பரிசோதனைக்கு பின்பு நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் படிப்படியாக கொரோனா கட்டுக்குள் வந்து, தற்போது கொரோனா தொற்று நோய் இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.
இப்போது சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லையைத் திறந்துள்ள நியூசிலாந்து, அங்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணித்த பின்னரே பொது இடங்களில் அனுமதிக்கின்றது.
கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தான் நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது என நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பேராசிரியர் மைக்கேல் பேக்கர் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), நியூசிலாந்து