விக்டோரியா மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை காலை வரையான கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 322 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரங்களில் 19 பேர் மரணமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன் பின்னர் ஒரேநாளில் பதிவான அதிகூடிய மரணங்கள் எண்ணிக்கை இதுவாகும்.
எனினும் விக்டோரியா மாநிலத்தில் தினசரி புதிய நோய்த்தொற்று நோயாளா் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எனவே, முடக்கல்களை சற்றுத் தளா்த்தி வெளியே சிக்கியுள்ளவா்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்குமாறு மாநில முதல்வா்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கான்பராவில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமர் மொறிசன், மெல்போர்ன் நகரில் கடுமையான சமூக முடக்கல் நடவடிக்கைகள் சாதகமாக விளைவுகளைக் காண்பிக்கின்றன. விக்டோரியா மாநிலத்தில் தினசரி புதிய நோய்த்தொற்றுகள் குறைந்துவிட்டன எனவும் கூட்டிக்காட்டினார்.
கடந்த வார காலப்பகுதியில் இருந்ததை விட இன்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனவும் அவா் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 5 மில்லியன் மக்கள் வசிக்கும் மெல்போர்ன் நகரம் ஜூலை தொடக்கத்தில் இருந்து முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளில் இருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமரின் உணா்வுகளைப் புரிந்துகொள்வதாகத் இன்று காலை செய்தியாளா்களிடம் கருத்து வெளியிட்ட விக்டோரியா மாநில முதல்வா் டேனியல் ஆண்ட்ரூஸ், எனினும் சமூக முடக்கல்களைத் தளா்த்துவதற்கான கால எல்லையை உடனடியாகத் தீா்மானிக்க முடியாது எனக் கூறினார்.
அடுத்த வாரம் நம்பிக்கையளிக்கும் முடி வுகள் தென்பட்டால் அதன் பின்னா் முடக்கல்களைத் தளர்த்துவது குறித்து ஆலோசிக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா