Friday 19th of April 2024 07:34:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு மத்தியில் கைகழுவத் தண்ணீா்,  சவற்காரம் கூட  இன்றி அவதியுறும் 300 கோடி மக்கள்!

கொரோனாவுக்கு மத்தியில் கைகழுவத் தண்ணீா், சவற்காரம் கூட இன்றி அவதியுறும் 300 கோடி மக்கள்!


கொரோனா தொற்று நோயிலிருந்து தப்பிக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவுமாறு பரிந்துரைக்கப்பட்டுவரும் நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சவற்காரத்தைக் கூடப் பெற முடியாது அவதியுற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

அத்துடன், 400 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது கடுமையான நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நீர் விவகாரங்கள் தொடா்பான குழு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் உலகம் முழுவதும் ஐந்தில் இரண்டு பேர் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறார்கள்.

300 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் மற்றும் சவற்காரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

400 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதத்தில் ஆவது கடுமையான நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர்.மேலும் கோடிக்கணக்கான மக்கள் நீர் மற்றும் சுகாதார வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பது உலகிற்கு மிகப்பெரிய பேரழிவு என ஐக்கிய நாடுகள் சபை நீர் விவகாரங்களுக்காக குழுவின் தலைவா் கில்பர்ட் எஃப். ஹுங்போ எச்சரித்துள்ளார்.

சுத்தமான நீர் மற்றும் சுகாதார பாதுகாப்புத் தொடா்பில் அசிரத்தையாக இருந்ததன் விளைவுகளை நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் போதிய தண்ணீா் மற்றும் சுகாதார பாதுகாப்பு இல்லாத நிலை ஆபத்தை உருவாக்குகிறது எனவும் கில்பர்ட் எஃப். ஹுங்போ தெரிவித்துள்ளார்.

2030-க்குள் உலகம் 6.7 டிரில்லியன் டொலர் நிதியை நீர் ஆதாரங்களை அதிகரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவழிக்க வேண்டும்.

அவசரகால சுகாதாரத் தேவைகளுக்காக மட்டுமல்லாமல், உணவு நெருக்கடியைத் தணிக்கவும் சிறந்த நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும் இந்த உட்கட்டமைப்பு அவசியமானது எனவும் ஹூங்போ கூறினார் .

சில நிறுவனங்கள் மிக அவசரமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளன. அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் மற்றும் க்ரோஹே, ஜப்பானின் லிக்சில் குரூப், யுனிசெஃப் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து போத்தல்களில் உள்ள சிறிதளவு தண்ணீரைப் பயன்படுத்தி கை கழுவ உதவும் கருவிகளை உருவாக்கியுள்ளன.

இதன் விற்பனையைத் தொடங்குவதற்கு முன்பு 2.5 மில்லியன் மக்களுக்கு இவற்றை நன்கொடையாக வழங்க இந்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட இது ஒரு விரைவான, குறுகிய கால ஏற்பாடு மட்டுமே. ஆனால் அதிக வீடுகளுக்கு குழாய் நீரை வழங்குவது போன்ற நிலையான ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன என வட கரோலினா பல்கலைக்கழகத்தின் நீர் நிறுவனத்தின் உறுப்பினரும் முன்னாள் நீருமான கிளாரிசா ப்ரோக்லெஹர்ஸ்ட் கூறினார்.

அடிப்படை நீர் மற்றும் சுகாதார சேவைகளை பெறமுடியாமையாத ஏழைகள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இது சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

நீா் நெருக்கடியால் நகரங்களில் உள்ள வறிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் அதிக சன நெருக்கடிக்குள் குறைவான நீர் ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இதனால் சமூக இடைவெளியைப் பேணுவது கடினமாக உள்ளது எனவும் ஐ.நா. நீா் விவகாரங்களுக்கான குழு தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 570 கோடி மக்கள் ஆண்டுக்கு குறைந்தது ஒரு மாதமாவது தண்ணீர் பற்றாக்குறையுடன் வாழ நேரிடலாம். இது தண்ணீருக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் போட்டியை உருவாக்கும் என ஐ.நா.வின் நீா் விவகாரக் குழுத் தலைவா் ஹூங்போ கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE