உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்னும் சில நாட்களில் ரஷ்யாவில் பதிவு செய்யப்படும் என ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
தேவையான சோதனை நிலைகளை ரஷ்ய விஞ்ஞானிகள் முடித்துள்ளனர். புதிய கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை அவா்கள் நிரூபித்துள்ளனர். இது நம் நாட்டிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் நம்பிக்கையை அளிக்கிறது எனவும் தனது பேஸ்புக்கில் புதின் பதிவிட்டுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தின் செயற்கைக்கோள் மனிதகுலம் விண்வெளிக்குச் செல்ல வழிவகுத்தது. இதேபோன்று இப்போது ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி தொற்று நோயில் இருந்து உலகம் விடுபட வழிவகுக்கும். முககவசம் மற்றும் சமூக விலக்கல் இல்லாத பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் இது வழியைக் காட்டும் எனவும் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காமாலேயா ஆய்வு நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் முழுமையான பரிசோதனை முடியும் முன்னரே இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்வது ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காமாலேயா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி நாளை ஆகஸ்ட் 12-ஆம் திகதி உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக பதிவு செய்யப்பட உள்ளது என ரஷ்ய பிரதி சுகாதார அமைச்சர் ஓலெக் கிர்ட்னெவ் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்ட பிறகு தான் தடுப்பூசியின் திறனை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜூன் 18-ஆம் திகதி இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 38 தன்னார்வலர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை தொடங்கப்பட்டது. அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
இரண்டு குழக்களுக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று அதில் வெற்றி கிடைத்துள்ளது எனவும் ரஷ்யாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டவா்களுக்கு இந்தத் தடுப்பூசி கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படவுள்ளது எனவும் ரஷ்யாவின் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தடுப்பூசிக்கான முழுமையாக நெறிமுறைகளை பயன்படுத்திதான் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளது. மனிதப் பரிசோதனை முழுமையாக முடியாமல் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது ஆபத்தானது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது