பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமடைந்துள்ளது.
இந்த 3 நாடுகளிலும் கடந்த 24 மணி நேரங்களில் தனித்தனியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரழிவை சந்தித்த இந்நாடுகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தொற்றுநோய் மீண்டும் தீவிரமடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் “ புதிதாக 1,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஒரு மாதத்தக்குப் பின்னர் பதிவான அதிகளவு தொற்று நோயாளா்கள் தொகை இதுவாகும்
அதேபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பிரான்ஸில் கடந்த 24 மணிநேரங்களில் 2,524 புதிய தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 1,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பெல்ஜியம், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று நோயாளா்கள் தொகை மீண்டும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
பிரான்ஸ் மீண்டும் தவறான பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் உரிய பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் பொறுப்பற்றவகையில் நடந்துகொண்டால் நாடு மீண்டும் தொற்று நோயால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். அதன்பின் இதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிரான்ஸில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2,524 புதிய தொற்று நோயாளர்களுடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்