கொவிட்-19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள 50,000 இலங்கையா்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையா்களை நாட்டுக்குள் அழைத்துவரும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 19,000 போ் நாடு திரும்பியுள்ளனர்.
93 நாடுகளில் இருந்து இலங்கையா்கள் இதுவரை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று நோய், அதனால் ஏற்பட்ட வேலை இழப்பால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள 50,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்து காத்திருப்பதாகவும் அவா் கூறினார்.
முன்னதாக, கந்தக்காடு புனா்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட கொத்துத் தொற்று நோய் மற்றும் பொதுத் தோ்தல் காரணமாக இலங்கையா்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இரண்டு முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கையா்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்துவருவதற்கான விமான ஏற்பாடுகளை அரசு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளா் கூறினார்.
எனினும் இலங்கை மற்றும் பிற நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அகதிகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான சரியான கால எல்லை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.