இனப்படுகொலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கின்றேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பிராக தேர்வாகியுள்ள த.ம.தே.கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாணசபை முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்றியிருந்தது. அக் கூட்டணி சார்பில் அதி கூடிய விருப்பு வாக்குகளை (21,554) பெற்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூட்டணி சார்பில் கிடைக்கப்பெற்ற ஆசனத்தின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக தனது பயணத்தை இறுதிப்போரில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து ஆரம்பித்துள்ளார் சி.வி.விக்னேஸ்வரன்.
கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று சுடரேற்றி மலர் தூவி படுகொலைக்குள்ளான மக்களுக்கு அஞ்சலி செலுத்தி தனது பாராளுமன்ற பயணத்தை ஆரம்பித்துள்ளார்.இதன் போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கருத்துரைக்கும் போது,
நாம் இன்று 2009 மே மாதத்தில் உயிர் நீத்த எம் உறவுகளின் கல்லறையில் நின்று பிரார்த்திக்கின்றோம்.
இன விடுதலைப் போராட்டத்தின் பிரதிபலிப்பு இந்த முள்ளிவாய்க்கால். இனப்படுகொலை நடந்ததும் இங்குதான். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு என் பாராளுமன்ற பயணத்தை இங்கிருந்து தொடங்குகின்றேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால்