உலகின் முதல் கொரோனோ வைரஸ் தடுப்பூசியின் முதல் தொகுதி இரண்டு வாரங்களில் பாவனைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக ரஷ்யா சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவின் தடுப்பூசியின் பாதுகாப்புக் குறித்து சில வல்லுநா்கள் வெளியிட்டுவரும் கவலைகள் ஆதாரமற்றவை என மொஸ்கோ நிராகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி வெற்றிபெற்றதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்த மறுநாளே தடுப்பூசிக்கான ஒப்புதல் ரஷ்ய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெறப்பட்டுவிட்டதாக ரஷ்யா சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) ரஷ்ய பாதகாப்பு அமைச்சுடன் இணைந்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
ஸ்புட்னிக் எனப் பெயரிடப்பட்டுள்ள ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை இன்னும் இரு வாரங்களில் மக்கள் போட்டுக்கொள்ள முன்வரலாம். அப்படி, தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும் என ரஷ்யா கூறியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து 100 கோடி சொட்டு கொரோனா தடுப்பு மருந்துக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை மற்றும் இலங்கையிலுள்ள ரஷ்யா அதிகாரிகளும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி தொடா்பில் நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இதேவேளை, ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தொடா்பில் ரஷ்ய சுகாதார அமைச்சுடன் பேச்சு நடத்தப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்