தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிக்குள் நீண்டநாட்களாக இடம்பெற்றுவந்ததாக தெரிவிக்கப்பட்ட முறுகல் நிலையின் தொடராக கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து வி.மணிவண்ணன் நீக்க மத்தியகுழு நேற்று தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கு உடன்பட மறுத்ததன் தொடராக மணிவண்ணனுக்கும் கட்சியினருக்கும் இடையில் மறைமுகமாக மோதல் போக்கு இடம்பெற்று வந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
தேர்தல் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பரப்புரை நடவடிக்கைகளின் போது கட்சியின் தலைவர்களின் படங்களை இணைத்து பரப்புரை மேற்கொள்ளாமை உட்பட்ட பல்வேறு முரண்பாடுகள் இரண்டு தரப்புக்கும் இடையில் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையிலேயே மணிவண்ணனின் பொறுப்புக்களிலிருந்து அவரை விடுவிக்க மத்திய குழு தீர்மானித்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.