யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்காக பாலசுந்தரம் நிமலதாஸன் மற்றும் ரவிராணி யோகேந்திரராஜா ஆகியோருக்கு இடையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பில் 25 வாக்குகளை நிமலதாஸன் பெற்றிருந்த நிலையில் ரவிராணி யோகேந்திரராஜா 16 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடச் சபையில் அவரை இன்று தெரிவு செய்தது.
கணக்கியல் துறை பேராசிரியரான அவர், 38ஆவது வயதில் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திறந்த மற்றும் தொலைக் கல்வி அலகின் பணிப்பாளரும் கணக்கியல் துறையின் பேராசிரியருமாக பாலசுந்தரம் நிமலதாசன், மிகக் குறைந்த வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் பேராசிரியராகத் தெரிவாகியவர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டதாரியான அவர், ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் பட்டதாரியாகவும் பங்களாதேஷ் சிட்டாக்கோங் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் நிறைவு செய்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு விரிவுரையாளராக தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்த பாலசுந்தரம் நிமலதாசன், 2010ஆம் ஆண்டில் முதுநிலை விரிவுரையாளராகவும் 2015ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் உயர்வடைந்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்