தென்னிந்திய திரையிசையின் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உயிருக்கு ஆபத்து நிகழ்ந்துவிட்டதாகத் தெரிவித்து தென்னிந்தியாவின் தொலைக்காட்சி ஒன்றின் அடையாளடத்துடன் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஒளிப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் சில விசமிகள் பகிந்தமையை அடுத்து அதனை நம்பிய இலட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து வருகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
பிரபலத்தை தேடும் நோக்கில் எந்தவித பொறுப்புணர்வும் அற்றவகையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் வருந்தத் தக்கது.
இதேவேளை பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னுடைய அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சற்று முன்னர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய சமூக வலைளத்தளத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டுவர தன்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு பதிவிட்டுள்ளார்.அதேபோல தென்னிந்திய திரைத்துறை பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் அவர் மீண்டுவர வேண்டும் என மன்றாட்டமாக பதிவிட்டுவருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு : இதனிடையே குறித்த ஒளிப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒன்றாகிய புதிய தலைமுறை குறித்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அது போலியானது என்றும் குறிப்பிட்டு அதனை நம்பவேண்டாம் என்று தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றது.