கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை அடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வணிகச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய அலைகள் தோன்றினால் சுகாதார சேவையின் திறன்களை அது பாதிக்கும். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் சந்தா்ப்பங்கள் ஏற்படலாம் என கனேடிய சுகாதார அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொற்று நோயின் உச்சத்தை எதிர்நோக்க நேரிடலாம். அதனைத் தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக தொற்று நோயின் தாக்கம் ஜனவரி 2022 வரை நீடிக்கும் எனவும் சுகாதார அதகாரிகள் கணிப்பிடுகின்றனர்.
தொற்று நோயில் அதிகரிப்பு ஏற்படும்போது அது சுகாதார அமைப்பின் திறனை மீறும் எனவும் அவா்கள் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர்.
கனடா சுகாதார அமைப்பால் இதுவரையில் தொற்று நோயை வெற்றிகரமாகச் சமாளிக்க முடிந்தது. எனினும் தொற்று அதிகரித்தால் அதன் திறன் வீழ்ச்சியடையலாம். அதன்மூலம் இறப்புக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் நேற்று இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறினார்.
எனினும் மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா? என்பது குறித்துக் கருத்து வெளியிட அவா் மறுத்துவிட்டார்.
கனடாவின் 10 மாகாணங்களில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வரும் நிலையில் இந்த அதிகாரிப்பு பதிவாகியுள்ளது.
சரியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாங்கள் பின்பற்றினாலும் கூட சமூக, பொருளாதாரச் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும்போதே தொற்று நோயின் வீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கனேடிய சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று மீளவும் அதிகரித்துவரும் அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா தொற்றும் மற்றொரு சிக்கலாக மாறி வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடாவில் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை தற்போது 9,015 ஆக உள்ளது. ஆகஸ்ட் 23 க்குள் இறப்புக்கள் 9,115 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பசிபிக் மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா கடந்த சில வாரங்களில் தொற்று நோயில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளையவா்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று நோய் நெருக்கடியின்போது கனடாவில் முன்னணி சுகாதாரப் பணிகளில் ஈடுபட்ட அகதிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்படும் என ஒட்டாவா தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா