ரஷ்யாவின் புதிய கொவிட்-19 தடுப்பூசி குறித்து திருப்தியாக உணரவில்லை என அந்நாட்டின் பெரும்பான்மையான மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
3,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய மருத்துவ நிபுணர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலானவா்கள் ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து திருப்தி வெளியிடவில்லை.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்யா கூறியுள்ளது.
1957 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனால் ஏவப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள் வெற்றியைக் குறிக்கும் வகையில் முதல் செயற்கைக் கோளான “ஸ்பூட்னிக் வி” என்ற பெயரே இந்த தடுப்பூசிக்கு இடப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தடுப்பூசியின் சோதனைகள் இன்னமும் இறுதிக் கட்டத்தை அடையவில்லை.
இதேவேளை, உலகின் முதல் தடுப்பூசியைத் தயாரித்த நாடு என்ற பெருமையைப் பெறுவதற்காக தடுப்பூசியின் பாதுகாப்பு தொடா்பில் சமரசம் செய்யப்படுகிறதா? என சில விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் 3,040 மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களிடம் நடத்திய ஆய்வில் 52 வீதமான மருத்துவா்கள் இந்தத் தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்தத் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 24.5 வீதம் போ் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புக்கொள்வதாகக் கூறினர்.
பதிலளித்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் நோயாளிகள் மற்றும் சகாக்களுக்கு தடுப்பூசியை பரிந்துரைப்பதாகக் கூறினர்.
சில ரஷ்யா்கள் இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புக் குறித்துச் சந்தேகம் வெளியிடுகின்றனர். அதனைப் பயன்படுத்துவது குறித்து அச்சம் வெளியிடுகின்றனா். ஆனால் சிலா் ரஷ்ய தடுப்பூசி குறித்த எதிர்மறையாக தகவல்கள் வெளிநாடுகளின் பொறாமையால் உந்தப்படுகின்றன எனத் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு முன்னர் ரஷ்ய தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
எனினும் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அது அவரது மகள்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மொஸ்கோவில் நேற்று முன்தினம் செய்தியாளா்களிடம் பேசும்போது கூறினார்.
இதேவேளை, மொஸ்கோவின் தடுப்பூசிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதில் அவசரம் காட்டப்படுவதாக வெளிவரும் விமா்சனங்களை ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ நிராகரித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்