கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி -செங்கோட்டையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். பல இலட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திரம். விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம். இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை. கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது.
கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையும் பாராட்டுவோம். பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர். 130 கோடி மக்களின் சகிப்புத்தன்மையும் உறுதியும் கொரோனாவை வெல்லும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு என்ற ஒற்றுமையுணர்வுடன் நாம் சவால்களை வெல்வோம்.
அடுத்த ஆண்டு நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம். எதிர்காலத்திற்கான புதிய கண்ணோட்டம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய சபதங்களையும் நாம் ஏற்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை என்றும் நிரந்தரமாக ஆள கனவு கண்டார்கள்.
இந்தியாவின் பலம் அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டில் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நமது ஒற்றுமையுணர்வை குறைவாக மதிப்பிட்டனர். பிரிட்டனின் விரிவாக்க கனவை இந்தியா ஒற்றுமையால் முறியடித்தது. இந்தியர்கள் ஒருபோதும் தியாகத்திற்கு அஞ்சியதில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.
கொரோனாவை வெல்லவும் 130 கோடி இந்தியர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர். சொந்தக் காலில் நிற்கும்படி பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவுரை கூறுவதுண்டு. இன்று நாம் சுயசார்புடன் சொந்தக் காலில் நிற்கும் வலிமை பெற்றுள்ளோம். சுயசார்பு என்பதே ஒவ்வொரு இந்தியரின் தாரக மந்திரமாக உள்ளது. உலகம் இந்தியாவிடம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா தனது ஆன்ம பலத்தால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்றைய உலக நாடுகள் ஒன்றையொன்றை சார்ந்து நிற்கும் நிலை உள்ளது.
நமது சுயசார்பால் நாம் உலகிற்கே உதவியாக இருக்க முடியும். இந்தியா உலகைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும்.
முன்பு நாம் கோதுமையை இறக்குமதி செய்து வந்தோம். இப்போது நமக்குத் தேவையான கோதுமையை நாமே விளைச்சல் செய்கிறோம் .
இந்திய விவசாயிகளுக்கு எனது நன்றி. விவசாயத்துறையை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயம் முதல் விண்வெளி ஆய்வு வரை இந்தியா முன்னேறி வருகிறது. திறன் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும். படைப்பாற்றலை வளர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் வளர்ச்சிக்காக மிகச்சிறந்த ஒத்துழைப்பை சர்பாஞ்ச்கள் வழங்கி வருகிறார்கள். அங்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
லடாக்கில் கார்பன் சமநிலையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் லடாக்கியர்களுடன் சேர்ந்து புதுமையான வழிகளில் வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்தியர்களின் தாரக மந்திரம் உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது என்றவாறு இருக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். அதை செய்யாவிட்டால் அந்த பொருட்களுக்கு வாய்ப்பு குறைவதுடன் அந்த முயற்சி ஊக்கம் பெறாமல் போகலாம். இப்போது நாம் இந்தியாவில் இந்தியாவுக்காகத் தயாரிப்போம் என்ற நிலையில் இருந்து இந்தியாவில் உலகுக்காக தயாரிப்போம் என்ற அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறோம் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா