நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் வருவதனை தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளை தரிசியுங்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த தேர் உற்சவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் 25ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. குறித்த ஆலய உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வழிபாட்டினை மேற்கொள்ள ஏற்பாடுகள் பொலிசார் இராணுவத்தினர் அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் அதனை பின்பற்றி தமது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனினும் அண்மைய நாட்களில் ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது. மக்கள் இது தொடர்பில் சற்று தெளிவாக இருக்க வேண்டும். தற்போது நாட்டில் கொரோனா தொற்று சற்று தணிந்து காணப்படுகின்றது எனினும் சமூக தொற்று தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
உதாரணமாக அண்மைய நாட்களில் ராஜாங்கனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்ட விடயம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தினை பொறுத்தவரைக்கும் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அதனைச் செயற்படுத்தியுள்ளோம்.
எனினும் நல்லூர் ஆலயத்தை பொறுத்தவரையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும் பொதுமக்கள் ஆலய தேர் உற்சவத்தில் கலந்து கொள்வது வழமை நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலைமை காணப்படுவதன் காரணமாக இம்முறை அவ்வாறு இடம்பெற அனுமதிக்க முடியாது.
இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்தின் தேர் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த முறை ஆலய தேர் உற்சவத்திற்கு மக்கள் அதிகளவில் வருவதை தவிர்த்து சமூகத்தொற்றிலி ருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் எனக்கு ஒரு கடமையுள்ளது. அதாவது சமூகத்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அந்த ரீதியில் இந்த வேண்டுகோளை உங்களிடம் முன்வைக்கின்றேன்.
மக்கள் நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு அதிகளவில் வருகை தராது வீடுகளிலிருந்து தரிசியுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். இந்த விடயத்தினை கருத்தில் கொண்டு நாளை மறுதினம் இடம்பெறும் நல்லூர் ஆலய தேர் உற்சவத்திற்கு அடியவர்கள் வீட்டில் இருந்தவாறே முருகக் கடவுளை தரிசியுங்கள் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்