எங்கள் மக்கள் சக்தி சார்பில் தேசியப்பட்டியல் நியமன விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
குறித்த கட்சியின் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தில் தமது கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக தனது பெயரை குறிப்பிடுமாறு அவர் கோரியிருந்தார்.
பின்னர், குறித்த கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபை கூடி விமலதிஸ்ஸ தேரரை குறித்த பதவியில் இருந்து நீக்கியதோடு, புதிய செயலாளர் ஒருவரையும் நியமித்திருந்தனர்.
பின்னர் புதிய செயலாளரின் கையெழுத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வேறு ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டு எழுத்து மூலம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு இதன்போது எந்தவொரு நபரின் பெயரையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர், குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது. எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாகவே தீர்வு வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கு பதிலளித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடமபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை