சென்னை மாநகர் உருவானதன் 381-ஆவது ஆண்டு விழாவை சென்னை வாசிகள் மிகவும் உற்சாகமாக இன்று கொண்டாடி வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய நகரங்களின் வரிசையில் 35 இடத்தை பிடித்துள்ள சென்னை மாநகராட்சி. தமிழகத்தின் தலைநகராக விளங்கி வருகிறது.
1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் திகதி சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டது. கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. தற்போது, வர்த்தகம், தொழில்நகரம் உள்ளிட்டவற்றின் கூடாரமாக சென்னை திகழ்ந்து வருகிறது.
இதேவேளை, சென்னை மாநகர் உருவாகிய தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது எங்கள் சென்னை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.