நியூசிலாந்தில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து 51 பேரைச் சுட்டுக் கொன்ற இனவெறிக் கொலையாளி, மூன்றாவது மசூதியை குறிவைக்க திட்டமிட்டிருந்தமை அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ப்ரெண்டன் டாரன்ட் என்ற இனவெறியன் மசூதிகளை எரிக்கவும் திட்டமிட்டிருந்தார். முடிந்தவரை அதிகளவானோரைக் கொல்வதே அந்தக் கொலையாளியின் நோக்கமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையாளிக்கு எதிராக 51 கொலைகள், 40 கொலை முயற்சிகள் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தக் கொலையாளி மீதான விசாரணைகள் முடிவுற்று தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தண்டனை அறிவிக்கும் முன்னர் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு கொலையாளி நேற்று அழைத்துவரப்பட்டார்.
கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற இறுதிக்கட்ட விசாரணைகளின்போது கொல்லப்பட்டவா்களின் உறவினா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் கூடியிருந்தனர்.
இதேவேளை, தண்டனை அறிவிக்கப்பட முன்னர் கொலையாளியின் கருத்தைக் கேட்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து