தென்னிந்திய திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் இருக்கிறார். பிரதிபலிப்புக்களை அவரிடம் காண முடிகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது என சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் எனவும் மருத்துவமனை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் தந்தையைப் பார்த்தேன். அவரது உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம் தெரிகிறது என எஸ்.பி.பாலசுப்ரமணியத்தில் மகன் எஸ்.பி.பி.சரண் இன்று மாலை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
நேற்று, நேற்று முன்தினம் இருந்ததை விட அவா் தேறியுள்ளார். பாடல் கேட்கிறார். பேச முயற்சிக்கிறார். அனைத்து நல்ல அறிகுறிகளும் அவரிடம் தெரிகின்றன. எனவே, அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன் எனவும் எஸ்.பி.பி.சரண் இன்ஸ்ராகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.