நியூசிலாந்தில் இரண்டு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து 51 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற வலதுசாரித் தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுவதும் சிறைவிடுப்பின்றி குற்றவாளி தண்டனை அனுபவிக்க வேண்டும் என கிறிஸ்ட்சேர்ச் உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தண்டனை நாட்டின் நீதிமன்றங்களில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நியூசிலாந்து - கிரைஸ்ட்சேர்ச் நகரில் கடந்த ஆண்டு மார்ச், 15-ஆம் திகதி இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரித் தீவிரவாதியான 29 வயது பிரென்டன் சரமாரியாகச் சுட்டு 51 பேரைப் படுகொலை செய்தார்.
இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட பிரென்டன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் பிரென்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தண்டனைக் காலத்தில் அவருக்கு சிறைவிடுப்பு வழங்கக் கூடாது. அவர் தனது முழு வாழ்நாளையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் எனவும் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீர்ப்பளிக்கப் பட முன்னர் கொலையாளியான பிரென்டனி்டம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என நீதிபதி கமரூன் மந்தர் கேட்டார்.
அதற்கு இல்லை! நன்றி என பிரென்டன் அமைதியாக பதிலளித்தார்.
நீங்கள் இழைத்த குற்றம் கொடூரமானது மற்றும் கடுமையானது. உங்கள் நடவடிக்கைகள் மனிதாபிமானமற்றவை என நீதிபதி கொலையாளியைப் பார்த்துக் கூறினார்.
கிறிஸ்ட்சர்ச் உயர்நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்க முன்னர் நான்கு நாட்களாக இடம்பெற்ற விசாரணையின் பின் இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 நாட்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவா்களின் உறவுகள், காயங்களுடன் உயிர் தப்பியவா்கள், பாதிக்கப்பட்டவா்கள் இந்தத் தாக்குதல் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட வேதனையை விவரித்தனர்.
இதேவேளை, நியூசிலாந்து 1961 இல் கொலைக்கான மரண தண்டனையை இரத்துச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து