தமிழகம் கன்னியாகுமரி தொகுதிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றிரவு உயிரிழந்தார்.
இன்றிரவு 6.56 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவா் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் ஆகஸ்ட் 1-ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று தீவிரமாகி நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்றிரவு உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் - அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியைத் தொடங்கியவா். பின்பு சிறியளவில் கடை ஒன்றை ஆரம்பித்த படிப்படியாக முன்னேறி வசந்த் அன்ட் கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியையும் அவா் தொடங்கி நடத்தி வந்தார்.
வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.