12வது திருகோணமலை அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி போதிய வெளிச்சமின்மையால் பாதியில் கைவிடப்பட்டதை அடுத்து வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்தது.
12வது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை நடத்தும் வாய்ப்பினை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று நேற்றைய தினம் (29)நடாத்தியது.
12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை நடாத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மாவட்ட செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்து பரிமாற்றங்களில் 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
96 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய சேருவல பிரதேச செயலக அணி 4.5 பந்து பரிமாற்றங்கள் நிறைவுற்ற வேளை 5 இலக்குகளi இழந்து 44 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் போதிய வெளிச்சமின்மையால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளும் இணைச்சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
தொடரின் சிறப்பாட்டக்காரராக மாவட்ட செயலக அணியின் சக்திகுமரனும் போட்டியின் ஆட்டநாயகனாக சேருவல பிரதேச செயலக அணியின் தலைவர் சந்தனவும் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக மாவட்ட செயலக அணியின் துவாரகனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
13வது மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பை கோமரங்கடவெல பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்க வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை