திருமணமாகி 50 நாட்களே ஆக நிலையில் புதுப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு திருச்சி மாவட்டத்தில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் ஹெலன் ராணி (வயது 26) என்பவருக்கும் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே வாழவந்திபுரத்தை சேர்ந்த ஜான் ரவி மகன் அருள்ராஜ் (வயது 28) என்பவருக்கும் கடந்த 10.7.2020 அன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றிரவு இருவரும் வாழவந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு மாடியில் படுத்து தூங்கினர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அந்த வீடு அமைந்துள்ளது.
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கிறிஸ்டியன் ஹெலன் ராணி தனியாக ஆற்றின் கரையோர பகுதிக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்திய அருள்ராஜ் அவர்களுடன் சேர்ந்து ஹெலன்ராணியை தேடும் பணியில் ஈடுபட்டார்.
ஆற்றங்கரையோர பகுதி கடும் இருட்டாக இருந்த நிலையில் அவர்களால் எதையும் செய்யமுடியவில்லை. இதையடுத்து இன்று அதிகாலையில் கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு தண்ணீரில் ஹெலன்ராணி பிணமாக இருப்பதை கண்டனர். ஆடைகள் களைந்த நிலையில் நிர்வாணமாக கிடந்த ஹெலன்ராணி அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் காணமல் போயிருந்தது.
உடனே இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஹெலன் ராணி எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற ஹெலன் ராணியை மர்மநபர்கள் கற்பழித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாயானது அங்கிருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணமான 50 நாட்களில் புதுப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, மலேசியா, தமிழ்நாடு