"இலங்கையில் 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று எவரும் இல்லை. அப்படிக் கூறப்படுவோர் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று தமிழ்த் தரப்பினர் கூறும் விவகாரத்துடன் அரசுக்கும் இராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்களையும் புனர்வாழ்வின் பின்னர் அரசு விடுவித்துவிட்டது.
போர்க்களத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருப்பார்கள். அவர்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எப்படிக் கூற முடியும்?
போர் நடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். அவர்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எப்படிக் கூற முடியும்?
அதேவேளை, தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கும் அரச படைகளுக்கும் தொடர்பு இல்லை" - என்றார்.