அரசாங்கத்தின் தாபன விதி கோவையை ஒழுங்கான முறையில் அனைத்து சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கும் சமனான முறையில் பின் பற்றப்பட வேண்டும் எனவும், சுகாதார உதவியாளர்களை ஒருதலைப் பட்சமாக நடத்துவதை வட மாகாண சுகாதார திணைக்களம் நிறுத்த வேண்டும் எனவும் கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் இன்று புதன் கிழமை (2) காலை 8 மணி தொடக்கம் 11 மணி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாள பணி புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
வட மாகாண சுகாதார திணைக்களத்தினால் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சுகாதார உதவியாளர்கள் மாத்திரம் உள்வரவு மற்றும் வெளியேறும் போது விரல் அடையாளங்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யா விட்டால் மேலதிக நேர கொடுப்பணவுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வைத்திய சாலையில் கடமை புரியும் அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் தாபன விதி கோவை ஒன்று என்பதுடன் தங்களுக்கு விரல் அடையாள பதிவு கட்டாயமாக்கப்பட்டால் நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் விரல் அடையாள பதிவு மேற்கோள்ள வேண்டும் எனவும் சுகாதார உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாண திணைக்களத்தால் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் தங்களை ஒரு வகையிலும், ஏனைய வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களை ஒரு வகையிலும் நடத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே இன்றைய தினத்திற்குள் வடமாகாண சுகாதார பணியாளர்களுக்கு ஒழுங்கான நீதியான முடிவை பெற்று தராத பட்சத்தில் தாய் சங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் எனவே உரிய பதிலை இன்று உடனடியாக பெற்றுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது குறித்த போராட்ட பகுதிக்கு வருகை தந்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய முறையில் பேசி தொடர்சியாக போராட்டம் இடம் பெறாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு தருவதாக தெரிவித்தார்.
-சுமார் மூன்று மணி நேர சுகாதார ஊழியர்களின் போராட்டம் காரணமாக வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு உள் நோயாளர் பிரிவு நடவடிக்கைகள் அனைத்து ஸ்தம்பிதம் அடைந்ததுடன், மக்களின் அவசர சேவைக்கு என 25 சுகாதார ஊழியர்கள் மட்டும் ஒவ்வொரு வைத்திய சாலையிலும் கடமையில் ஈடுபட வடமாகாணம் முழுவதும் ஒழுங்கு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்