"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு தேசிய உரிமைகளை அழிப்பதற்காகவா மக்கள் ஆணையை பெற்றுக்கொடுத்தார்கள்?"
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின்போது நாட்டின் உரிமைகளையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதற்காகத் தங்களை வெற்றிபெறச் செய்யுமாறு ஆளும் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசுக்கு வழங்கியுள்ளனர். ஆனால், அரசு உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து அவற்றை இல்லாதொழிக்கவே முயற்சிக்கிறது.
புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் இடிக்கப்பட்டு 2 மாதங்களாகின்றன. ஆனால், அந்த விவகாரத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை, புத்தளம் - ஆனைவிழுந்தான் பகுதியில் காணப்பட்ட சதுப்பு நிலத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும் பெகோ இயந்திரத்தின் சாரதியும் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செயற்பாடுகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கும். அவர்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உலக உரிமையான சிங்கராஜ வனத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. சிங்கராஜ வனத்தில் பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதனை ஜனாதிபதி பார்வையிடச் சென்று "இந்த விடயங்களை இவ்வாறு செய்யுங்கள்" என்று கூறி வந்திருந்தார். ஜனாதிபதி அவ்வாறு தெரிவிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் சூழலியலாளர்களிடம் விளக்கம் பெற்றுக் கொண்டாரா? துறை சார்ந்த நிபுணர்களிடம் எந்த விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளாது வெறுமனே அங்கு சென்று பார்வையிட்டு வந்ததில் எந்தப் பயனும் இல்லை.
நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக் ஆட்சிக்கு வந்தவர்களே உரிமைகளை இல்லாதொழிக்கின்றனர். இதற்காகவா நாட்டு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கினார்கள்? பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் இது தொடர்பில் நாட்டு மக்களைத் தெளிவுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலும் விவாதிப்போம். அதுமட்டுமன்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளையும் எடுப்போம்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை