பிரான்ஸில் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
நேற்று 7,157 புதிய தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை 7017 போ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
தொற்று நோயின் ஆரம்பம் முதல் பிரான்ஸில் 7 ஆயிரத்துக்கு அதிகமான தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இது நான்காவது சந்தர்ப்பமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை, 7,319 புதிய தொற்று நோயாளா்கள் உறுதி செய்யப்பட்டனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 7,578 பேர் கடந்த மார்ச் 31-ஆம் திகதி பதிவாகினர்.
இதேவேளை, தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 18 ஆல் அதிகரித்து, மொத்தம் 464 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 15 ஆலும் புதன்கிழமை 22 ஆலும் அதிகரித்துள்ளது.
நேற்று மேலும் 21 பேர் பிரான்ஸில் கொரோனாவுக்குப் பலியான நிலையில் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 30,706 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 23 தீவிர தொற்று மையங்களும் 37 மிதமான பாதிப்புக்களைக் கொண்ட தொற்று மையங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பெருநகரங்களில் தொற்று நோய் அதிவேகமாகப் பரவி வருகிறது. இது கவலை அளிக்கிறது என பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளாகி அதிகம் இளைஞர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று நோய் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமையே இதற்குக் காரணம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு