பிரான்ஸில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாளில் கிட்டத்தட்ட 9000 ஆயிரம் புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
பிரான்ஸில் கடந்த மார்ச் தொற்று நோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளில் பதிவான மிக உயர்ந்தபட்ச தொற்று நோயாளர் தொகை இதுவென பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று மொத்தம் 8,975 கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தினசரி ஏழாயிரத்தக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இதில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் கொரோனா தொற்று சோதனைத் திறனை பிரான்ஸ் அதிகரித்துள்ளது. இதுவே தொற்று நோயாளர் தொகை கூர்மையான அதிகரிப்புக்குக் காரணம் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதும் 53 புதிய கொத்துத் தொற்று மையங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நேற்று மேலும் 46 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவா்களுடன் தீவிர கிசிச்சைப் பிரிவில் உள்ள மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.
புதிய நோயாளிகளுடன் பிரான்ஸில் இதுவரை பாதி்க்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 309,156 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்புக்களும் 30,724 ஆக அதிகரித்துள்ளன.
வைரஸ் பரவுதலின் "ஆர்" வீதம் நாடு தழுவிய அளவில் 1.3 ஆக உள்ளது. அதாவது 10 பாதிக்கப்பட்ட ஒருவர் சராசரியாக 13 பேர் தொற்றுக்குள்ளாகக் காரணமாக இருப்பதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தொற்றுக்குள்ளாகி ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்வோரில் சுமார் 90 வீதமானவா்கள் 65 வயதுக்கு மேற்பட்டவா்களாகவே உள்ளனர். எனினும் தொற்று நோய் அதிகம் இளைஞர்களிடையிலோயே பரவி வருகிறது எனவும் பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேவேளை, தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் பாரிஸ் உட்பட நாடெங்கும் தொற்று நோய் அபாயம் இனங்காணப்பட்ட 22 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு கல்வி அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.
தொற்று நோயை அடுத்து மூடப்பட்டிருந்த பிரான்ஸ் பாடசாலைகள் இந்த வார ஆரம்பத்தில் திறக்கப்பட்டு சுமார் 12 மில்லியன் மாணவர்கள் பாடசாலைக்குத் திரும்பியுள்ள நிலையில் அங்கு மீண்டும் தீவிரமாகத் தொற்று நோய் பரவி வருவது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் இந்த வாரம் பாடசாலைக்குத் திரும்பிய 11 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் முககவசங்களை அணிய வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்ககது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு