தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகுக்குள் அத்துமீறி ஏறிய இலங்கையைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதுடன் மீன் பிடி வலைகள் உள்ளிட்ட பெறுமதியான உபகரணங்கள் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
தமிழ்நாட்னைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டு ஆறு காட்டுத்துறைக்கு தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கையிலிருந்து இரண்டு படகுகளில் 6 மீனவர்கள் கூரிய ஆயுதங்களுடன் படகில் ஏறி மிரட்டியதுடன், தாக்கியுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகில் ஏற்றி வைத்திருந்த மீன்பிடி வலைகளையும், கடலில் இருந்த வலைகளையும் சேர்த்து சுமார் 600 கிலோ வலைகளை வெட்டி எடுத்து கொண்டு, படகில் இருந்த செல்போன் ஒன்று, ஜீ.பி.எஸ். ஒன்று, டூல்ஸ் கிட் ஒன்று, கிரீஸ் பம்பு 1, 20 லீட்டர் டீசல் கேனுடன், டோர்ச் லைட் 2 மற்றும் சிக்னல்லைட் 2 ஆகிய பொருட்களை எடுத்து கொண்டு இஞ்சின் டீசல் வயரை அறுத்து விட்டு பொருட்களுடன் சென்று விட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீதம் உள்ள வலைகளை படகில் ஏற்றிக் கொண்டு படகினை சரி செய்து தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பியதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடல் எல்லைப் பகுதியில் இந்திய மீனவர்களின் வருகை அண்மை காலமாக அதிகரித்துள்ளதாகவும், கிளிநொச்சி இரணைதீவு மற்றும் அதை அண்டிய பகுதிகள் உள்ளடங்கலாக அவர்களின் வருகை அதிகரித்துள்ளதால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மீன்பிடி முறையில் ஈடுபட்டுவரும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் மினவர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.