அவுஸ்திரேலியாவின் கொரோனா தொற்று நோய் மையமான விக்டோரியாவில் விதிக்கப்பட்டுள்ள சமூக முடக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 போ் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விக்டோரியா மாநிலம் கிட்டத்தட்ட ஐந்து வார காலமாக சமூக முடக்கல் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொற்று நோய் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில் விக்டோரியா மாநில தலைநகர் மெல்போர்னில் சுமார் 200 போ் நேற்று ஒன்றுகூடி மாகாண அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தமது சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவுமம் குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸாரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏனையோர் கொரோனா சுகாதார வழிகாட்டல்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக விக்டோரியா பொலிஸார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இது புதிசாதுரியமான, பாதுகாப்பான செயற்பாடில்லை. அத்துடன் சட்டவிதிகைளை மீறி ஆர்ப்பாட்டக்காரா்கள் ஒன்றுகூடியுள்ளனர். இந்த நடவடிக்கை முற்றிலும் சுயநலமானதாகும் என விக்டோரியா மாநில முதல்வா் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
விக்டோரியாவில் நேற்று சனிக்கிழமை 76 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிபடுத்தப்பட்டனர். 11 போ் இறந்துள்ளனர்
விக்டோரியாவிற்கு வெளியே நியூ சவுத் வேல்ஸில் ஐந்து புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன் குயின்ஸ்லாந்தில் ஒரு தொற்று நோயாளி கண்டறியப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களில், நாட்டில் நோய்த்தொற்றுகள் மும்மடங்காக அதிகரித்து 26,207 ஆக உயர்ந்துள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் பதிவான தொற்று நோயாளிகளில் 75% பேர் விக்ரோறியாவைச் சேர்ந்தவர்களாவர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இதுவரை 748 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் ஏற்பட்ட 90% கொரோனா மரணங்கள் விக்டோரியாவில் பதிவாகியுள்ளன..
விக்டோரியாவில் கொரோனா இரண்டாவது அலையின் கடுமையான தாக்கத்தை புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன என அவுஸ்திரேலியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி மைக்கேல் கிட் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொருளாதார மந்த நிலையைத் தடுக்க கட்டுப்பாடுகளை நீக்குமாறு விக்டோரியா மாநில அரசை அவுஸ்திரேலிய மத்திய அரசும் வணிக நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும் அதனை ஏற்க மறுத்துள்ள விக்டோரியா முதல்வர் ஆண்ட்ரூஸ், சமூக முடக்கலைத் தளர்த்தாது வேறு வழிகளில் பொருளாதா மீ்ட்பு நடவடிக்கைகளை ஆராய்வதாகக் கூறினார்.
இது ஒரு சுகாதாரப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது பொருளாதாரதத்தை சீர் செய்து எதனையும் காண முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா