சீனாவின் சினோவக் பயோடெக் (Sinovac Biotech Ltd) தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என அதன் இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும் உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் அவசர சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே சினோவக் தடுப்பூசிக்கு சீன அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் இளையோர், நடுத்தர வயதினர், முதியோர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்தத் தடுப்பூசியின் 2-ஆம் கட்ட பரிசோதனை பரிசோதனை 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்த தடுப்பூசி சோதனையில் சினோவக் பயொடெக் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் 3,000 பேர் பங்கேற்றனர். ஆனால் இந்த இரண்டு கட்ட பரிசோதனையில் மொத்தம் எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது? என்ற முழு விவரத்தை சீனா வெளியிடவில்லை.
இந்த 2 கட்ட பரிசோதனையிலும் சினோவக் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேலானவர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்துள்ளது.
இந்த எதிர்ப்பு சக்தி இளையோர் மற்றும் நடுத்தர வயதினருடன் ஒப்பிடும்போது சற்று குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து சினோவக் தடுப்பூசி தற்போது இறுதி 3-ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையும் வெற்றிபெறும் பட்சத்தில் உலக அளவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய சினோவக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 3-ஆம் கட்ட பரிசோதனைகள் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா