ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் நீடித்துவரும் பல ஆயிரக்கணக்காணவா்களின் உயிர்களைப் பலியெடுத்த உள்நாட்டுப் போருக்கு தீா்வுகாணும் வகையில் ஆப்கான் அரசு மற்றும் தலிபான்கள் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதானப் பேச்சுவார்த்தை கட்டாரில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள இரு தரப்புக் குழுவினரும் கட்டாரை வந்தடைந்துள்ளனர்.
முன்னாள் உளவுத்துறைத் தலைவரான மசூம் ஸ்டானெக்ஸாய் தலைமையிலான ஆப்கானிய அரசாங்கத்தின் 21 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு இந்தச் பேச்சுவர்த்தையில் பங்கெடுக்கிறது.
தலிபான்கள் சார்பில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுன்சாதாவின் நெருங்கிய சகவான மௌலவி அப்துல் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பேச்சில் பங்கேற்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் அப்துல்லா, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் தலிபான் துணைத் தலைவர் முல்லா பரதர் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.
இன்று சம்பிராதய பூா்வமாக பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளபோதும் இரு தரப்பினரும் முதல் முறையாக நேருக்கு நேர் அமரும் பேச்சுவார்த்தைகள் தலைநகர் டோஹாவில் திங்கட்கிழமை தொடங்கும் என்று அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் பிரைடூன் கவ்ஸூன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையை கடந்த மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் நடைபெறவிருந்தது. ஆனால் பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா-தலிபான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில், 1,000 ஆப்கானிய துருப்புக்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் 5,000 தலிபான் கைதிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது.
எனினும் தமது நாட்டினரைக் கொன்ற 6 தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கு பிரான்சும் அவுஸ்திரேலியாவும் ஆட்சேபம் வெளியிட்டன. எனினும் இதில் சில சமரங்கள் ஏற்பட்ட பின்னர் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின்றன.