அமெரிக்க மேற்கு கடலோர மாகாணங்களில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 30-க்கும் அதிகமானவா்கள் பலியாகியுள்ளதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரிகானில் மட்டும் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரிகான், கலிபோர்னியா மற்றும் வொஷிங்டனில் மூன்று வாரங்களுக்கு மேலாக மோசமாகப் பற்றியெரிந்துவரும் காட்டுத் தீயால் மில்லியன் கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன.
இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றங்களால் எமது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதித் தோ்தலில் ஜனநாயகக் கட்சியின் போட்டியிடும் வேட்டபாளரான ஜோ பிடன் நேற்று சனிக்கிழமை கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும் இந்த ஜதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாரில்லை எனவும் அவா் சாடினார்.
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ட்ரம்ப், மோசமான காட்டுத் தீ பரவியதற்கு அமரிக்க வனத்துறை நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என நேற்று சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.