உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன பாதுகாப்பு அமைச்சு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன இராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் இராணுவ முன்னேற்றங்கள் மற்றும் குறிக்கோள்கள் குறித்த வெளியிடப்பட்ட வருடாந்த பாதுகாப்புத் துறை அறிக்கையிலேயே அமெரிக்கா மீது சீன பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
பிராந்திய அமைதியின்மையை தூண்டுவதுடன், சர்வதேச ஒழுங்கு விதிகளை உலக அமைதியை சீர்குலைத்து வருவது அமெரிக்காவே என்பதற்கு அதன் கடந்த காலச் செயற்பாடுகள் சான்றாக உள்ளன என சீன பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.
இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு இருதரப்பு இராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதுகாக்க அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வு கியான் கூறினார்.