கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
இன்று செப்-14 வெளியிட்டுள்ள காணொளி பதிவில் குறித்த தகவலை சரண் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுரையீரல் பாதிப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றமை எக்ஸ்-ரே மூலம் தெரியவருகிறது.
உடல் உறுப்பு இயக்கத்தை தூண்டும் உடற்பயிற்சியும் நல்ல விதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த உடற்பயிற்சிக்கு நல்ல விதத்தில் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார்.
மருத்துவர்கள் தொடர்ச்சியான தீவிர காண்காணிப்பை வழங்கி வருவதாகவும் எஸ்.பி.பி.சரண் தெரிவத்தார்.
தந்தைக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை