இலங்கை அரசியலமைப்பின் உத்தேச 20ஆவது திருத்தச் சட்ட வரைபு குறித்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா.வின் 45 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் இன்றைய தொடக்க அமர்வில் பேசிய மிச்செல் பச்லெட் , 20-ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட சுயாதீன அமைப்புக்களின் சுயாதீனத் தன்மை பறிபோகும் எனக் கவலை தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை அந்நாட்டு அரசு நிராகரிப்பதாகவும் தனது பேச்சில் மிச்செல் பச்லெட் கவலை தெரிவித்தாா்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை இலங்கையில் தெரிவாகியுள்ள புதிய அரசாங்கம் மறுத்து வருவது குறித்து நான் கவலைப்படுகிறேன்.
30-1 தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது.
அத்துடன் உத்தேச 20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் வரைபில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்ககள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் இதுவும் ஐ.நாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறுவதாகவே அமையும் எனவும் அவா் கூட்டிக்காட்டினார்.
மேலும் படுகொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜெண்டிற்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து ஜனாதிபதி விடுவித்தது குறித்தும் மிச்செல் பச்லெட் கரிசனை வெளியிட்டார்.
அத்துடன் முக்கிய சிவில் நிர்வாக துறைகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்துத் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இத்தகையவா்கள் தமது கடந்த காலக் குற்றங்கள் தொடா்பான விசாரணைகளில்போது பொலிஸ் மற்றும் நீதித் துறையில் தலையீடு செய்யும் சந்தா்ப்பம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தில் பாதிப்பட்டுத் தப்பிப் பிழைத்தவா்கள், அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மிச்செல் பச்லெட் இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்தாா்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஏற்படுவதற்கு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழல் ஏற்பட வேண்டும். இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதிக கவனம் செயத்த வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஊக்குவித்தாா்.