ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது கவலைக்குரியதென மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேவைப்பட்டால் மாகாணத்தில் மற்றொரு சமூக முடக்கல் உட்பட தொற்று நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் எனவும் அவா் கூறியுள்ளார்.
ஜூன் தொடக்கத்தில் இருந்து ஒன்ராறியோவில் புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் இது குறித்து குயின்ஸ் பார்க்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே டக் ஃபோர்ட் இதனைத் தெரிவித்தார்.
தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவது அனைவரிடத்திலும் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தார்.
தொற்று நோய் அதிகரிக்கும்இடங்களைப் பொறுத்து அந்த இடங்களில் சமூக முடக்கல்கள் எதிர்காலத்தில் அமுல் செய்யப்படலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
உலகெங்கும் தொற்று நோயின் இரண்டாவது அலை உருவாகியுள்ளது. நாங்கள் இன்னும் முதலாவது அலையுடன் போராடும் நிலையில்தான் உள்ளோம். இரண்டாவது அலை ஏற்பட்டால் அதன் விளைவு மோசமாக இருக்கும் எனவும் டக் ஃபோர்ட் எச்சரித்தார்.
நெருக்கடிகள் தொடரும் நிலையில் பெரிய அளவில் ஒன்றுகூடுவதை மாகாண மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்தார்.
ஒன்ராறியோவில் 3-ஆம் கட்டமாகக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் 2-ஆம் நிலைக்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நெருக்கடி எல்லை மீறினால் மீண்டும் 2-ஆம் கட்டத்துக்குள் செல்லும் முடிவை எடுக்கவும் தயங்கப்போவதில்லை எனவும் டக் ஃபோர்ட் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா