தேநீரில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிவந்த ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளார்.
தற்போது ஜேர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அலெக்ஸே நவால்னி விரைவில் ரஷ்யா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மன் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் சேர்க்கப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சுவாசக்கருவிகள் உதவியின்றி முதன் முதலாக அவரால் நேற்று சுயமாக மூச்சு விட முடிந்தததாக மருத்துவா்கள் தெரிவித்தனர்.
மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட நவால்னி, மருத்துவமனையில் தன்னைச் சந்தித்த தனது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷுடன் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் உங்களை எல்லாம் பிரிந்துள்ளதாக உணர்கிறேன். இப்போது என்னால் முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், ஒரு நாள் முழுவதும் எனது சொந்த முயற்சியில் கருவிகளின்றி மூச்சு விட முடிந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் திகதி சைபீரியாவில் இருந்து விமானத்தில் மொஸ்கோ நோக்கி சென்றபோது, நடுவானில் திடீரென அலெக்ஸே நவால்னி சுயநினைவை இழந்தார். இதையடுத்து பாதி வழியில் விமானம் தரையிறக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தீவிர விமர்சகரான நவால்னியை கொலை செய்ய ரஷ்ய அரசு முயற்சிப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினார்கள். ஆனால், அதை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜேர்மன் அரசின் தலையீ்ட்டை அடுத்து ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நவால்னி, அங்குள்ள மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நவால்னிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது இரத்தத்தில் நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் அடங்கிய விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ரஷ்ய அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜேர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதேவேளை உடல்நிலை தேறிவரும் நவால்னி விரைவில் ரஷ்யா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா திரும்பியதும் நவால்னி ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பாரா ? என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃபிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவா், அத்தகைய சந்திப்பு நடப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படி ஒரு சந்திப்பு நடக்காது என்றே நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.