அமெரிக்காவின் வொஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள பெரும் புகை கனடாவில் பல்வேறு பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதால் அங்கு காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகையால் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிகள் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் தரம் உலகின் மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் ஐக்யூ-ஏர் ( IQAir) அமைப்பு உலகின் காற்றின் தரம் மிக மோசமாக உள்ள நகரங்களின் பட்டியலில் வான்கூவரின் போர்ட்லாண்ட், ஓரே ஆகியன இடம்பெற்றுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மற்றும் தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதால் இந்தப் பகுதிகளில் தபால் விநியோகத்தை நிறுத்திவைப்பதாக கனடா தபால் துறை அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா கிரவுன் கோர்ப்பரேஷன், வெளியிட்டுள்ள பதிவில் மெட்ரோ வன்கூவர் பகுதி, தெற்கு வன்கூவர் தீவு (டங்கன், சிட்னி மற்றும் விக்டோரியா), வடக்கு வன்கூவர் தீவு (காம்ப்பெல் நதி மற்றும் பவல் நதி), கிழக்கு வன்கூவர் தீவு (கோர்டேனே, நானாயிமோ மற்றும் போர்ட் ஆல்பெர்னி), ஒகனகன் பள்ளத்தாக்கு மற்றும் சிமில்கமீன் பகுதிகள் (கெலோவ்னா மற்றும் பென்டிக்டன்), கூட்டெனே பகுதிகள் (கிரான்ப்ரூக், காஸ்ட்லேகர், நெல்சன் மற்றும் டிரெயில்), தோம்சன், நிக்கோலா மற்றும் ஃப்ரேசர் பகுதிகள் (வெர்னான் மற்றும் கம்லூப்ஸ்) ஆகிய பிராந்தியங்களில் தபால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை பாதுகாப்பாக மாறினால் விநியோகங்கள் மீண்டும் தொடங்கும் என்று கனடா தபால் துறை கூறியுள்ளது.