கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆபத்து நீடிக்கும் நிலையில் இலங்கையில் புத்தகக் கண்காட்சி போன்ற அதிகளவானவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஏராளமானோர் பங்கேற்கும் நிகழ்வுகளால் தொற்று நோய் பரவல் அபாயம் உள்ளது என சுகதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தலைமை அதிகாரி டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளில் ஒரு தொற்று நோயாளி பங்கேற்றால் கூட ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் பெருமளவானோர் பங்கேற்பதால் தடம் அறிந்து பாதிக்கப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவது கடினம் எனவும் அவா் கூறினார்.
புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்ப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் இப்போது பெருமளவானவா்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்கத் தவறி வருகின்றனர். பேருந்துகளில் இப்போது இருக்கைத் திறனுக்கு மேலதிகமாகப் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். பலா் முக கவசங்களை அணிவதில்லை.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீடிக்கும் நிலையில் அனைவரும் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் சுகதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தலைமை அதிகாரி டாக்டர் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.