"டெனீஸ்வரனுடனான வழக்கு விவகாரம் ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது."
- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தபின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'வடக்கு மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை வந்தமை குறித்து என்ன சொல்கின்றீர்கள்?' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.
அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்தபோது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார். ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார். குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தால்தான் நான் அவரைப் பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.
அதன்பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று இன்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார். அதற்கு ஈடாக நாங்கள் உயர்நீதிமன்ற மேன்முறையீட்டு மனுவைக் கைவாங்குவதாக மன்றில் தெரிவித்தோம். இதனடிப்படையில் நீதிமன்றம் மன்றை அவமதித்தமை சம்பந்தமான வழக்கை கைவாங்க அனுமதியளித்தது" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, வட மாகாணம்